தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இரு குடும்பத்தினர் ஒன்றிணைந்து, பாளையம்புதூர் உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
அப்போது சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் கூறும்போது: நாராயணபுரம் கிராமத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் பூர்வீக நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலம் முறையாக வாரிசுதாரர்களுக்கு சட்டப்படி பிரித்துக் கொடுக்கப்படவில்லை. இதனால் இரு குடும்பத்தை சேர்ந்த பெண்கள் நீதிமன்றம் நாடி தங்களுக்கும் வாரிசுதாரர் என்ற முறையில் பூர்வீக நிலத்தில் முறையான சொத்து வழங்கிட நீதிமன்றம் நடவடிக்கை எடுக்ககோரி, வழக்கு தொடர்ந்து உள்ளோம். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்னும் நீதிமன்றம் சம்மந்தபட்ட வாரிசுதார்களுக்கு, பூர்வீக சொத்தில் இருந்து பாகம் பிரித்து கொடுக்கப்படவில்லை. வழக்கு நிலுவையில் உள்ள இந்த பூர்வீக நிலத்தில், வாரிசுதாரர்கள் யாரும் கையெழுத்து போடாத நிலையில், ஒரு வாரிசு தாரர் போலியாக பத்திரம் ஆவணம் வைத்துக் கொண்டு, சம்மந்தப்பட்ட நிலத்தில் அத்துமீறி வீடு கட்டிக்கொண்டு தற்போது, மின் இணைப்பு பெற முயற்சி செய்து வருகிறார்.
நீதிமன்ற வழக்கு நிலுவைவில் இருக்கும்போது எந்த பாகம் யாருக்கு என்று தெரியாது.இவ்வாறு இருக்கும் நிலையில், போலியான பத்திர பதிவு செய்து கொண்டு நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் நபருக்கு ஆதரவாகவும், அவருக்கு மின் இணைப்பு கொடுக்க முயற்சித்து வரும் மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, நீதிமன்றம் நாடிய வாரிசுதாரர்கள் என்ற முறையில் முதல்வரின் தனிப்பிரிவு, தர்மபுரி மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட மின்சார வாரிய உயர் அதிகாரிகளிடம் மனு வழங்கி உள்ளோம். இந்த மனுவை கண்டுகொள்ளாமல் மின் இணைப்பு கொடுக்க முயற்சிக்கும் பாளையம்புதூர் உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள பூர்வீக நிலத்தில் மின்கம்பம் அமைத்து மின் இணைப்பு வழங்குவதை கைவிடக்கோரி தற்போது தர்ணா போராட்டம் நடத்தி உள்ளோம்.
எங்களது போராட்டம் இது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க விட்டால்,தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக வளாகத்தில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த நபர்கள் ஒன்றிணைந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாளையம்புதூர் உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இரு குடும்பங்களைச் சேர்ந்த நபர்களிடம், சம்மந்தப்பட்ட உதவி பொறியாளர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் உங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதுடன், நீங்கள் கூறும் நிலத்தில் மின் கம்பம் அமைத்து மின் இணைப்பு கொடுக்க மாட்டோம் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

