தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் அறிக்கை;
தருமபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தில் லட்சுமி நாராயணா கலைக்கல்லூரியின் பின்புறம், ஜெமினி நினைவாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை வழிகாட்டுதல்படி அதியமான் ஜல்லிக்கட்டு PR பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்து வாட்ஸ் ஆப் (Whats App) உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்தி உலா வருவதாக தெரியவருகிறது.
இந்நேர்வில் அரசுகடிதஎண். 5401/AH3-2/2024-1, கால்நடைபராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நாள்:28.11.2024-ன்படி வழங்கப்பட்டுள்ள அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி (SOP) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக உரிய வழிமுறையாக அரசாணை பெற்றும், அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு பின்னரே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த நாளது தேதி வரை மாவட்ட நிர்வாகத்தினால் எந்த அமைப்புக்கும் அனுமதியேதும் வழங்கப்படவில்லை என்பதால், மேற்கண்டவாறு வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் எந்த அமைப்பினராவது அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் நபர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
