தர்மபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு செயல்பட்டு வரும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய நிர்வாக பணிகளுக்கும் மாதம் தோறும் சுமார் 50 லட்சம் வரை அரசு பொது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பொது நிதியை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், மாதாந்திர ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், அலுவலக பராமரிப்பு செலவு, இயற்கை பேரிடர் வைப்பு செலவு மற்றும் முடிவுற்ற அரசு பணிகளுக்கு நிதி வழங்குதல் உள்ளிட்ட செலவினங்கள் போக, மீதமுள்ள பொது நிதி தொகை மட்டும் தான், புதிய பணிகளுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு இருக்கும் நிலையில் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள, ஊராட்சி ஒன்றிய பொது நிதியை, அரசு விதிமுறைக்குட்பட்டு ஒதுக்க கூடாது, நான் கூறும்படி தான் அனைத்து புதிய பணிகளுக்கு பொது நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்யகோரி, மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும், தர்மபுரி எம்.பி ஆ.மணி அவர்கள் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்து பேசி வருவதாக ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தர்மபுரி எம்பி ஆ.மணி கூறும்படி பணியாற்றாத பிடிஒ-க்களை, நீங்கள் எந்த யூனியனுக்கு போக வேண்டும் என, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், விரைவில் நீங்கள் மாற்றம் செய்யப்படும் என பகிரங்கமாக எம்.பி மணி மிரட்டல் விடுத்து வருவதாகவும் ஒருபுறம் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை ஏற்க மறுத்த பல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் தொடர்பான விவகாரங்கள், தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் முடிவு செய்து எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளட்டும், அதன்படி நாங்கள் பணி செய்து கொள்கிறோம், அதனால் எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. அரசு விதிமுறைகளுக்குட்பட்டு தான் எங்களால் பணி செய்ய முடியுமே தவிர, நீங்கள் கூறும்படி தங்களால், பணி செய்ய முடியாது என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறியதாக தெரிகிறது.
இவ்வாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து வரும், தருமபுரி எம்பி ஆ.மணியை கண்டித்து விரைவில், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்திருப்பதாகவும், சம்மந்தபட்ட துறையினர் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Source:Social media
