கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க, குளிக்க 4-வது நாளாக தடை நீடிக்கிறது.
நீர்வரத்து வீடியோவை பார்க்க:
👇👇👇👇👇👇👇👇
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது .இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை அடுத்து கபினி ,கிருஷ்ணராஜா சாகர், ஆகிய அணைகளில் இருந்து வினாடிக்கு 76,493 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீர் வந்து கொண்டிருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் நடைபாதை மேலே தண்ணீர் தொட்டு செல்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி மாவட்ட நிர்வாகத்தால் பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை தொடர்ந்து 4 -வது நாளாக நீடிக்கிறது.