
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் நல்லம்பள்ளி-இலளிகம் சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கக்கூடிய பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யும் இடமாகவும் உள்ளது. இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர் ஒட்டியே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கழிவு நீர் கால்வாயை பராமரிப்பு செய்து பல வருடங்கள் ஆகின்றது. அதன் காரணமாக கழிவு நீர் கால்வாயில் அதிக சகதிகள் தேங்கி நிற்பதால் கழிவுநீர் செல்வதற்கு போதிய வழி இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் கால்வாயில் அதிகப்படியான கழிவுகள் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு துர்நாற்றம் வீசுவதால் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது. அலுவலக சுற்று சுவர் ஒட்டியே கழிவுநீர் கால்வாய் தேங்குவதால் சுற்று சுவர் ஊறி சாய்ந்து கீழே விழும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சங எப்ப வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு தேங்கி இருக்கும் கழிவுநீரை சுத்தப்படுத்தி, கீழே விழும் நிலையில் உள்ள சுற்றுச்சுவரை மறு சீரமைப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
