நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் இருந்து வந்த குரங்குகள் வீடுகளை சூரையாடி வருகின்றன. இதனால் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த வெள்ளக்கல் பகுதியில் இருந்து தொப்பூர் வரை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள், குரங்குகள், மான்கள் மற்றும் பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இதில் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களை அவ்வப்போது சேதப்படுத்தி வருவது வழக்கம். ஆனால் வனப்பகுதியில் இருந்த குரங்குகள் உணவுகளை தேடி கிராம பகுதிகளுக்குள் வந்துள்ளது. அந்த குரங்குகள் கிராம பகுதிகளில் இருந்த உணவு வகைகளை உண்டு பழகியதால் வனப் பகுதிக்கு செல்லாமல் கிராமப் பகுதிகளிலேயே தங்கி உள்ளது. இதுபோன்று பாகல் அள்ளி, தண்டுகாரம்பட்டி, ஜருகு, பாளையம் புதூர் போன்ற வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம பகுதிகளில் 500க்கு மேற்பட்ட குரங்குகள் இடம்பெயர்ந்து கிராம பகுதிகளிலே தங்கி வருகின்றது.
இந்த கிராம பகுதிகளில் பகல் நேரங்களில் வீடுகளில் நுழைந்து வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடி எடுத்துச் செல்கின்றது. வீட்டிற்குள் நுழைந்த குரங்குகளை விரட்டச் சென்றால் குரங்குகள் ஒன்றிணைந்து கடிக்க வருகின்றது. அதுமட்டுமில்லாமல் வெளியில் கடைகளுக்கு செல்லும் குழந்தைகள், மற்றும் பெண்களை குறி வைத்து கடிப்பது போன்று அருகே வந்து வாங்கிச் செல்லும் உணவு பொருள்களை பிடுங்கி செல்கின்றது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் குரங்குகள் கடித்து விடும் என அச்சத்தில் பயந்து ஓடும்பொழுது கீழே விழுகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் குரங்குகளை பிடிப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றன. தண்டுகாரம்பட்டி பகுதியில் சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடிப்பதற்காக வனத்துறை இடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாத காரணத்தினால் ஊர் பொதுமக்களே சொந்த செலவில் குரங்கு பிடிப்பவர்களை வரவைத்து 50 குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். ஆனால் பிடிக்க முடியாத 30க்கும் மேற்பட்ட குரங்குகள் மீண்டும் வீடுகளை சூறையாடி வருகின்றன. இதனால் கிராமப் பகுதிகளில் சுற்றித் திரியும் குரங்குகளால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. இதனால் கிராமப் பகுதிகளில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
